bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Tamil
/
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
/
Judges 1
Judges 1
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 2 →
1
யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
2
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
3
அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
4
யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பத்தாயிரம்பேரை வெட்டினார்கள்.
5
பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
6
அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
7
அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
8
யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
9
பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
10
அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பெயர்.
11
அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
12
அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
13
அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
14
அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
15
அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
16
மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
17
யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பெயரிட்டார்கள்.
18
யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
19
கர்த்தர் யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
21
பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
22
யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடு இருந்தார்.
23
யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
24
அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
25
அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
26
அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
27
மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லெயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
28
இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
29
எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
30
செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
31
ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
32
ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
33
நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
34
எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
35
எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
36
எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21